Tuesday, 30 August 2022

ஸ்ரீலஸ்ரீ சங்கு சுவாமிகள் பசுவந்தனை

 

ஸ்ரீலஸ்ரீ சங்கு சுவாமிகள் தூத்துக்குடி மாவட்டத்தில் பசுவந்தனை என்னும் கிராமத்தில் உழவுத் தொழில் மரபில் சிவஞான தேசிகருக்கும் - ஞானம்மை தம்பதிகளுக்கு 1785-ம் ஆண்டு இளைய மகனாகப் அவதரித்தார்கள். மூத்தவர் தங்கப் பிள்ளை. சங்கு சுவாமிகள் சிறு வயது முதலே சிவ சிந்தனையுடன் எந்த நேரமும் தன் நிலை மறந்து எப்போதும் வானத்தை நோக்கி சிந்தித்துக் கொண்டே இருப்பார்கள். மழையோ,வெயிலோ அதனைப் பொருட்படுத்த மாட்டார்கள். தனியாகச் சிரிப்பதும், அழுவதுமாக இருப்பார்கள். இரவில் ஊருக்கு வெளியில் உள்ள தோப்புகளில் உறக்கமின்றித் தன்னந்தனியே உலவுவார்கள்.எனவே, சுவாமிகளை உணராதவர்களான ஊரார் அவரை மனநிலை பாதித்தவர் என்றே நினைத்தார்கள். ஆயினும், ஸ்ரீலஸ்ரீ சங்கு சுவாமிகள் எல்லோரையும் தமது குடும்பத்தார் என்று எண்ணி யார் இட்ட பணியையும் முகம் கோணாது செய்து முடித்து வந்தார்கள். அதைப் பயன்படுத்திய ஊர் மக்கள் நெற்கதிர்  கட்டுக்களைச் சுமக்கச் செய்தும், கிணற்றில் நீர் இறைக்கச் சொல்லியும் இன்னும் பற்பல வேலைகளை சுவாமிகளைச் செய்யச் சொல்லி வந்தனர். சுவாமிகளும் அவற்றைச் செவ்வனே செய்து முடித்து வந்தார்கள்.

   கார் மேகக் குவியலுக்குள் மறைக்கப்பட்ட கதிரவனைப் போல ஸ்ரீலஸ்ரீ சங்கு சுவாமிகள் தனது சக்திகளை வெளி உலகத்தினருக்கு வெளிப் படுத்தாமலேயே இருந்து வந்தார்கள்.   

அடித்த கை வலித்தது:- 

🍁🍂🍁🍂🍁🍂🍁🍂

   ஒரு சமயம் ஸ்ரீலஸ்ரீ சங்கு சுவாமிகளின் தந்தையார் சுவாமிகளை  விவசாய பூமியில் உழவு மாட்டைப் பூட்டி நிலத்தை நன்கு உழுது வருமாறு அனுப்பி இருந்தார். ஆனால் மதியம்  சுட்டெரிக்கும் உச்சி வெயிலின் போது எருதுகள் தவிப்பதைக் கண்ட சுவாமிகள் தான் உடுத்தியிருந்த வேட்டியைத் தண்ணீரில் நனைத்து எருதின் மீது போர்த்தி விட்டார்கள். அப்போது அங்கு வந்த தந்தையார் அவரை  அடித்து உதைத்தார். உடனே சுவாமிகள், "அப்பா அடிக்காதீர்கள். உங்கள் கை வலிக்கும்" என்றார். அதுபோலவே அடுத்த கனமே கை வலியால் மிகவும் துடித்துப் போனார் தந்தை. அப்போது அவரது கையை பிடித்து விட்டவராய் அப்பா "இனி கை வலிக்காது" என்றார். உடனே கை வலியும் நின்று போனது. இதைப்போலவே சுவாமிகளின் சகோதரரும் வயலுக்கு ஏற்றம் இரைத்துத் தண்ணீர் பாய்ச்சச் சொல்லி விட்டுச் சென்றார். சுவாமிகள் சிவ சிந்தனையுடன் ஏற்றம் இறைக்கத் தொடங்கினார்கள். சுவாமிகளின் சுபாவம் அறிந்த பக்கத்து வயலுக்குச் சொந்தக்காரன் தன் வயலுக்குத் தண்ணீர் மடையைத் திருப்பி விட்டுக் கொண்டான்.               விடிவதற்குள் பக்கத்து வயலில் நன்றாக நீர் பாய்ந்து இருந்ததைக் கண்ட சுவாமிகளின் சகோதரன் தங்கள் வயலில் ஒரு துளி நீரும் பாயாதிருப்பது கண்டு கோபத்துடன்,

ஒரு கம்பை எடுத்து வந்து சுவாமிகளைப் பலமுறை ஓங்கி அடித்தான். இத்தனை நேரம் சிவ சிந்தனையில் இருந்த சுவாமிகளோ சிரித்தபடி "தம்பி உனக்குக் கை வலிக்குமே" என்றார். அடுத்த நிமிடமே கீழே விழுந்து புரண்டு கை வலியால் துடியாய்த் துடித்தான். அது கண்டு சுவாமிகள் "வலி சரியாகிவிடும்" என்றார். உடனே வலி நீங்கியது

 சுவாமிகள் குறித்த இச்செய்தி ஊருக்குள் பரவியது முதல் சங்கு சுவாமிகளைக் கண்டால் எல்லோருக்கும் ஒரு வகை பயம் தொற்றி யாரும் கடுமையான வேலைகள் தர முன் வராது ஒதுங்கினர்

புயல் மழை:-

🌀🌀🌀🌀🌀

  ஒரு முறை வீட்டின் வெளியே அனைவரும் படுத்து உறங்கிக் கொண்டிருந்தனர். சுவாமிகள் திடீரென்று எழுந்து அனைவரையும் வீட்டினுள்ளே சென்று படுக்கச் சொன்னார்கள். கால்நடைகளைப் பாதுகாப்பான இடத்தில் கொண்டு சென்று கட்டினார்கள். அதன் உணவுகளை பத்திரமாக சேமித்து வைத்தார்கள். "இவனுக்குக் கிறுக்கு முற்றி விட்டது" என்று வீட்டில் உள்ளோர் பேசிக் கொண்டிருந்தனர். சிறிது நேரத்தில் மிகப்பெரிய புயல் காற்று வந்து கூரைகள் பறந்து சென்று கடும் மழையும்,வெள்ளமும் பாய்ந்து ஓடியது. இச் சம்பவத்துக்கு பிறகு சுவாமிகளின் சக்தியைப் பற்றி அனைவரும் உணரத் துவங்கினர். ஆனாலும் சுவாமிகளை முழுமையாக நம்பாது இருந்து வந்தனர்.

அமுத சுரபியான உணவு:-

🪷🍃🪷🍃🪷🍃🪷🍃

  ஒரு நாள் ஸ்ரீலஸ்ரீ சங்கு சுவாமிகளும் அவரது சகோதரரும் உணவருந்த அமர்ந்திருந்தனர். சுவாமிகள் சாப்பிடும் முன்பாக தியானிப்பது வழக்கம். அவ்வாறு கண்களை மூடி தியானத்தில் இருந்த போது சுவாமிகளின் தாயார்  இருவருக்கும் பரிமாற சுவாமிகளின் இலையிலிருந்த உணவை அவரது சகோதரன் எடுத்து உண்ட போதிலும் அந்த இலையில் அள்ள அள்ளக் குறையாமல் அமுத சுரபி என உணவு வந்து கொண்டே இருந்தது. இதனால் பயந்து போன அனைவரும் சுவாமிகளின் சக்தியை உணராது ஏதோ துஷ்ட ஆவி பிடித்து விட்டது என நினைத்து சுவாமிகளை மந்திரவாதியிடம் அழைத்துச் சென்றனர்.

மந்திரவாதி:-

🏵️💥🏵️💥🏵️💥

  ஸ்ரீலஸ்ரீ சங்கு சுவாமிகள் மந்திரவாதியைக் கண்டதும் "விதி முடிந்தவனா என் விதியை மாற்றப் போகிறான்?" என்றார். அவர் சொன்னதன் பொருள் அங்கிருந்த ஒருவருக்கும் விளங்கவில்லை. மந்திரவாதி எலுமிச்சம்பழம் எடுப்பதற்கென அருகில் இருந்த பூக்கூடையினுள் கையை விட உள்ளே இருந்த கருநாகம் அவனைத் தீண்டியது. அலறியபடியே சரிந்து அவ்விடத்திலேயே இறந்து போனான். மந்திரவாதியின் பூக் கூடையிலிருந்து வெளி வந்த கருநாகம் சுவாமிகளின் முன் வந்து பணிந்து நின்றது. இச்சம்பவத்திற்குப்  பின்னரே சங்கு சுவாமியிடம் ஏதோ ஒரு சக்தி இருப்பதை பசுவந்தனை மக்கள் உணரத் தொடங்கினர்.

ஜமீன்தாரின் மகோதரம்:-

🌸☘️🌸☘️🌸☘️🌸☘️

  இது போலவே சிங்கம்பட்டி ஜமீன்தார் 'மகோதரம்' எனும் நோயினால் பிடிக்கப்பட்டு வயிற்று வலியால் அவதியுற்ற போது மருத்துவரால் கைவிடப்பட்ட நிலையில் தில்லை அம்பல நடராஜனிடம் ஜமீன்தார் வேண்டினார். தொடர்ந்து 48 நாட்கள் விரதம் இருந்து நடராஜப் பெருமானை வணங்கி வந்தார். அப்போதும் நோய் தீங்காது போகவே ஜமீன்தார் அம்பலவாணனிடம் "விடிவதற்குள் என் நோய் தீரவில்லை என்றால் சிவகங்கை குளத்தில் விழுந்து உயிரிழந்து விடுவேன் என்று சபதம் செய்தார். அன்று இரவு ஜமீன்தாரின் கனவில் தோன்றிய தில்லை அம்பலத்தான் "பாண்டி நாட்டில் பசுவந்தனை என்னும் தலத்தில் உள்ள சங்கு சுவாமிகள் எனும் பற்றற்ற  அடியவர் ஒருவனால் உன் நோய் நீங்கும்" என்று அருளிச் செய்தார்.

  அதன்படி ஜமீன்தார் பசுவந்தனை நோக்கி பல்லக்கில் கிளம்பி சங்கு சுவாமிகளைக் கண்டறிந்து அவரது திருவடிகளில் விழுந்து கண்ணீர் பெருக வணங்கி நின்றார். அதுவரை தியானத்தில் மூழ்கி இருந்த சுவாமிகள் எதிரில் நின்ற ஜமீன்தாரைப் பார்த்து சிரித்தபடி, "நடராஜ மூர்த்தி அனுப்பி வைத்தாரோ? எனக் கேட்டபின் "இந்தப் பழத்தை சாப்பிடு" என்று தட்டில் உள்ள பழங்களில் ஒன்றை எடுத்துக் கொடுத்தார்கள். அதை உண்டதும் ஜமீன்தாரின் 'மகோதரம்' எனும் நோய் அகன்றது.     ஊரணிகள்:-

💧💦💧💦💧💦

   பசுவந்தனையிலும் அதன் சுற்றுப்புற கிராமங்களிலும் பாசனம் மற்றும் குடிநீருக்கு எப்போதும் தட்டுப்பாடு இருந்து வந்துள்ளது. காரணம் ஆறு, குளங்கள் எதுவும் அக்கிராமத்தில் இல்லை. எனவே, கிராம மக்கள் மழை நீரைச் சேகரித்து வைத்து அதனையே பயன்படுத்தி வருவது வழக்கம். ஒரு வருடம் மழை பொய்த்துப் போனாலும் மக்கள் பெரும் அவதியுற்று வந்தனர்.அது போன்ற தருணத்தில்  ஸ்ரீலஸ்ரீ சங்கு சுவாமிகள் பல ஊரணிகளையும், குளங்களையும் ஏற்படுத்தி வந்துள்ளார்கள். சுவாமிகள் வெளியில் எங்கும் பயணிக்கும் போது எவரேனும் "தாகமாக இருக்கிறது. குடிப்பதற்குத் தண்ணீர் வேண்டும்" என்று கேட்டுவிட்டால் சுவாமிகள் உடனே ஓரிடத்தில் அமர்ந்து கைகளால் மணலைத் தோண்டுவார்கள். உடனிருப்பவர்களும்  சேர்ந்து நிலத்தைத் தோண்டுவார்கள். சிறிது ஆழத்திலேயே தண்ணீர் ஊற்றுப் போல பீறிட்டுக் கொண்டு வரும். சுவாமிகளின் அருட்த்திறத்தால் உண்டான பல ஊரணிகள் இன்றும் பசுவந்தனை மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஊர்களில் உள்ளன. அவைகளுக்கு 'சங்கு சுவாமிகளின் ஊரணி' என்று அழைக்கப்பட்டு வருகின்றனர்.

ஜீவ ஐக்கியம்:-

🔥🔥🔥🔥🔥🔥

   பிற மகான்களைப் போலவே சங்கு சுவாமிகள் தன் சமாதியாகப் போகும் நேரத்தைத் துல்லியமாகத் தன் சீடர்களிடம் சொல்லி அதற்கான ஏற்பாடுகளைச் செய்யச் சொன்னார்கள். அன்றைய தினம் சுவாமிகள் பசுவந்தனையில் உள்ள கைலாய நாதர் ஆலயம் சென்று இறைவனைத் தொழுது பிறகு அவர் சொன்ன அதே நேரத்தில் உருத்திராக்க மாலைடனும், சின் முத்திரையுடன் அமர்ந்து சுவாமிகள் சிவஜோதியில்  ஐக்கியமானார்கள்.

   ஸ்ரீலஸ்ரீ சங்கு சுவாமிகள் தன் சீடர்களிடம்  கூறி இருந்தபடியே சமாதி செய்வித்து அவரது உடலை நல்லடக்கம் செய்தனர். இன்றளவும் தன் சமாதிக் கோயிலை நாடிவரும் பக்தர்களின் பிரார்த்தனைகளில் நிறைவேற்றி நல்லருள் புரிந்து வருகிறார் சுவாமிகள்.

  ஸ்ரீலஸ்ரீ சங்கு சாமிகள் பிறந்தது கி.பி 1785 என்றும் ஜீவசமாதி ஆனது 1830 என்று ஊகிக்கப்பட்டுள்ளது.

ஜீவசமாதி பீடம்:-

🍃🌸🍃🌸🍃🌸🍃

ஸ்ரீலஸ்ரீ சங்கு சுவாமிகளின் சகோதரரான தங்கப் பிள்ளையின் வாரிசான ஏழாவது தலைமுறையினர் பசுவந்தனையில் இன்றும் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் மூத்தவரான பிரம்மநாயகம் ஸ்ரீலஸ்ரீ சங்கு சுவாமிகளின் சமாதி வழிபாடுகளைக் கவனித்து வருகிறார். அடுத்தவர் மாடசாமிப் பிள்ளை பசுவந்தனை அ/மி கைலாய நாதர் ஆலயத்தில் கணக்கராகப் பணிபுரிந்து வருகிறார். ஸ்ரீலஸ்ரீ சங்கு சுவாமிகள் அவதரித்த பசுவந்தனையிலேயே அவரது ஜீவசமாதி அமைந்துள்ளது. சமாதி பீடத்தின் மீது சிவலிங்கப் பிரதிஷ்டையும், லிங்கத்தின் முன்பாக நந்தி தேவரும், தவிர  விநாயகப் பெருமானுக்கும் சன்னதி உண்டு.

சீடர்கள்:-

🍁🍀🍁🍀

 ஸ்ரீலஸ்ரீ சங்கு சுவாமிகளின் சமாதி பீடத்தைச் சுற்றி வலம் வந்தால் சங்கு சுவாமிகளின் சீடரான நத்தக்காடு சங்கு சுவாமிகள் சமாதியும் உள்ளது. மேலும், கோவிந்தபுரம் சங்கு சுவாமிகள், சிங்கிலிபட்டி சங்கு சுவாமிகள், மாவிலைப்பட்டி சங்கு சுவாமிகள் முதலான சீடர்களும் சங்கு சுவாமிகளுக்கு உள்ளனர். இவர்களில் சமாதிகள் வெவ்வேறு இடங்களில் அமைந்துள்ளன.

குருபூஜை:-

🔥🔆🔥🔆🔥

 இன்று 17.08.2022 புதன் கிழமை ஆவணி மாதம் முதல் நாளில் அசுபதி நட்சத்திரத்தில் ஸ்ரீலஸ்ரீ சங்கு சுவாமிகளின் 192 ம் ஆண்டு குருபூஜை நடைபெற உள்ளது.அதுசமயம் சுவாமிகளின் ஜீவ சமாதி பீடத்திற்கு பக்தர்கள் அனைவரும் வந்து கலந்து கொண்டு சுவாமிகளின் ஆசி பெற வேண்டுகிறோம்.

  அமைவிடம்:-

🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

 கோவில்பட்டியில் இருந்து தெற்கு 24 கி.மீ தொலைவில் உள்ளது பசுவந்தனை கிராமம்.


ஸ்ரீலஸ்ரீ சிகாமணி சித்தர்


கி.பி 600முதல் கி.பி 1200 வரை உள்ள காலம் தென்நாடு பல்லவர்களாலும், சோழர்களாலும் ஆண்டப் பெற்ற பொற்காலம் எனலாம்.
  பதினோராம் நூற்றாண்டின் முற்பகுதியில் சுமார் கி.பி 1008 இல் வாழ்ந்தவர் கொடைக்கல் அருட்குருநாதர் சிகாமணி சித்தர் ஆவார்.
  ஸ்ரீலஸ்ரீ சிகாமணி சுவாமிகளின் தோற்றமும், பெற்றோர் பற்றிய விபரங்களும் இதுவரை கிடைக்கப் பெறவில்லை.எனினும், சுவாமிகள் இன்றைய ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் வட்டம் கொடைக்கல் கிராமத்தில் நீண்ட காலம் தங்கி இருந்து இறைவனுக்கு ஆலயத் தொண்டும், மக்களுக்குச் சைவ - சமய ஞானத்தையும் வளர்த்து ஆன்மீகத் தொண்டுகள் பலவும் புரிந்து வந்துள்ளார்கள்.
  மக்களுக்கு ஆன்மீக உணர்வையும், இறை நாட்டத்தையும் வளர்த்து வந்த சுவாமிகள் ஒரு ஆவணி மாத வளர்பிறை மிருகசீரிட விண்மீன் நாளில் ஜீவமுக்தி  அடைந்தார்கள்.
  ஸ்ரீலஸ்ரீ சிகாமணி சுவாமிகளின் மீது குருபக்தி கொண்ட சீடர்களும், சுவாமிகளின் மீது பேரன்பு கொண்ட மக்களும் சித்தருக்கு ஜீவசமாதிக் கோவில் அமைத்து வழிபட்டு வந்துள்ளனர். எளிமையாய் விளங்கி வந்த ஆலயம் கால மாற்றங்களாலும், புயல் - மழை போன்ற இயற்கை சீற்றங்களினாலும் இடிந்து.. சிதிலமடைந்து வழிபாடின்றிப் போயிற்று.
  தற்சமயம் சித்தர்களின் ஜீவ சமாதி வழிபாட்டில் ஆர்வம் கொண்ட அன்பர்களும்,அடியார்களும்,பெரு மக்களும் கரங்கள் கோர்த்து சித்தரது அருளால் இறை உணர்வு தூண்டப் பெற்று அனைவரும் ஒன்றிணைந்து ஜீவசமாதி ஆலயத்தை கடந்த ஆண்டு மீண்டும் புனரமைத்துத் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா நடத்தினர்.
  அதனைத் தொடர்ந்து சிகாமணி சித்தருக்கு நாள்தோறும் நித்திய வழிபாடுகளும், பிரதோஷ வழிபாடுகளும், முழுமதி வழிபாடுகளும், தொடர்ந்து சிறப்புடன் நடத்தி வந்தனர்.
  சித்தர்கள் வழிபாட்டில் உள்ள பக்தர்கள் ஒன்றிணைந்து அருட்குருநாதர் சிகாமணி சித்தர் திருமேனி ஐம்பொன்னால் வடிவமைத்து இன்று முதலாம் ஆண்டு குருபூஜை  ஆவணி மாதம் 5ம் நாள் 21.08. 2022 ஞாயிற்றுக்கிழமை மிகச் சிறப்பாக மேன்மைமிகு தமிழ் மந்திரங்கள் ஓதி குருபூஜை விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
  அருள் குருநாதர் சிகாமணி சித்தரின் குருபூஜையில் கலந்து கொள்ளும் அன்பர்கள் அ/மி  ஆனந்தவல்லி உடனாகிய அ/மி ஆனந்தீஸ்வரர் திருக்கோவில் திருப்பணி தற்சமயம் நடைபெற்றுக் கொண்டு வருவதால் தங்களால் இயன்ற பொருளுதவிகளையும் செய்து இறையருளுடன் குருவருளையும் பெற்று மண்ணில் நல்ல வண்ணம் வாழ அன்புடன் அழைக்கிறோம்.



 

ஸ்ரீலஸ்ரீ ரெண்டி சாமி 11 ஆம் ஆண்டு குருபூஜை



சித்தர்களின் சமார்ப்பணம். வருகிற 30 .09 - 2022 வெள்ளிக்கிழமை .ஆனைமலை. பெருமாள் சாமிமலை அடிவாரத்தில்  அமைந்துள்ள திருவார்த் திருஅழுக்கு சாமி களின் ரூபத்ரைய தரிசனம் தந்து அருள் பாலித்துக் கொண்டிருக்கும் நமது சத்யேந்திர சித்தர் பீடத்தில் ஸ்ரீலஸ்ரீ ரெண்டி சாமிகளுக்கு 11 ஆம் ஆண்டு குருபூஜை குடும்பத்தினருடன் வந்து கலந்து கொண்டு  சித்தர்களின் பரி பூரண அருளாசி பெற்று ய்யுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.  தமிழ் நாட்டில் சித்த மஹா சமாதியுடன் கூடிய 18 சித்தர்களின் முதல் பேராலயம் இதுதான். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த பேராலயத்திற்கு வருகை புரிந்து சித்த தேடலில் உங்களை ஐக்கியப்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறேன். பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையத்தில் 23-ம் எண் பேருந்தில் ஏறி சித்தர் பீடம் எனக் கேட்டு இறங்கி குருபூஜையில் கலந்து கொள்ள அன்புடன் வேண்டுகிறேன். தொடர்புக்கு        மஹா சேவகர் தியானத்திருகிரி மாஸ்டர் நாராயணசாமிகள் 9698481547, 9344833157, 7339028547, 9894715668 

 

ஸ்ரீலஸ்ரீ ஆத்தூர் அன்னை பவானி, ஈரோடு மாவட்டம்

ஸ்ரீலஸ்ரீ ஆத்தூர் அன்னை




ஆன்ம சாதகர்கள் கடவுளின் அன்பையும் கருணையையும் பெற முயல்கிறார்கள். கடவுளை நேசிப்பதும் அவரது அன்பைப் பெறுவதும் எளிது. ஆனால் நமது இதயத்துள் கடவுள் நிறைந்து இருத்தல் வேண்டும்.
  அன்பே சிவமானால் மட்டுமே பார்க்கும் யாவையும்.,யாவற்றிலும் இறையையே காணமுடியும்.
அருள் அன்னை
🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️
    இவ்விதமே சிறுமியே பெண்ணாகி.. பெண்ணே அன்னையாகி... அன்னையே தெய்வமாகி.. அன்பெனும் தவமியற்றி அன்பே சிவமானவர்தான் "ஆத்தூர் அன்னை" என்று வழங்கி வரும் "அருள் அன்னை".
  அன்னையின் தவம்:-
☘️🍁☘️🍁☘️🍁☘️🍁☘️
 அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை கொண்ட வள்ளல் பெருமானாரின் வள்ளன்மையால் ஆத்தூர் அன்னையை ஆட்கொண்டு "அருள் அன்னை" என ஆக்கினார்கள்.
   அன்பெனும் அருட் ஜோதியைத் தன் கருவில் சுமந்து ஈன்றெடுத்த பெற்றோர் அன்னைக்கு 'லட்சுமி அம்மாள்' என்று பெயரிட்டு வளர்த்து வந்த போதும் இளம் வயதிலேயே பக்தியெனும் ஞானஊற்று அன்னையிடம் பீரிட்டு எழ ஆரம்பித்தது.
   பக்தன் தனது நன்மைக்காக அன்றி சுயநலமின்றி ஜோதி வடிவான இறைவனை மனத்துள் இருத்தி உலக நன்மைக்காக ஒளி ரூபமான இறையை நினைந்து செய்யும் பக்தி "நிஷ்காமிய பக்தி"யாகும். பக்தன் பெயரும் உருவமுமற்ற  பிரம்மத்தை மனதில் நிலை நிறுத்தி செய்யும் தியான நிலையே "நிர்குண உபாசனை" ஆகும்.
  இவ்விதம் அன்னை பலவிதத் தியான நிலைகளில் தவம் இயற்றத் தொடங்கினார். அன்னையைத் தவநிலையில் கண்டவர்கள் அவர்களுக்கு ஏதும் புரியாத நிலையில் அன்னையை மனநிலை பாதித்தவர் என்று எண்ணி அன்னையைத் துன்புறுத்தத் தொடங்கினர்.
   அதனால் அருளன்னை இடையூறுகள் இன்றி தவமியற்றும் வகையில் மரக் கிளைகளின் மீது அமர்ந்து தவம் மேற்கொள்ளத் தொடங்கினார். அதனைக் கண்ட குடும்பத்தினர் காவல்துறையினர் மூலம் அன்னைக்குப்  பாதுகாப்பு அளித்தனர்.
அன்னையின் அற்புதங்கள்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
   ஒருமுறை அம்மையார் மிகுந்த கசப்பு மிக்க எட்டிக்கொட்டையை உண்ட போதும்,அன்னையை ஒருமுறை அரவு தீண்டிய போதும் அன்னையின் உடலில் எவ்வித பாதிப்பும், மாற்றமும் இன்றி இயல்பாக இருப்பதைக் கண்டபோது தான் அன்னையின் ஞான நிலையைக் குடும்பத்தினரும், ஊராரும் உணர்ந்து கொண்டனர்.
    அதுமுதல் அன்னையின் பக்தி நிலைக்கும், தவநிலைக்கும் ஊரு ஏதும் விளைவிக்காது இருந்தனர்.இந்நிலையில் தொடர்ந்து தவம் மேற்கொண்டிருந்த ஸ்ரீஅன்னை, கால ஓட்டத்தின் இடையே மனம் போன போக்கில் சென்று பின்னர் பவானி கூடு துறையை அடைந்தார்கள்.
   தவ அன்னையின் அருள் ஆற்றலை அறிந்து கொண்ட பக்தர்கள் தவ அன்னையிடம் அருளாசி பெற நாடி வந்தனர். பக்தர்கள் அதிகம் வரவே அன்னையைப் பவானி ஊராட்சிக் கோட்டை வேதகிரி மலை அடிவாரத்தில் இருந்த ஒரு நந்தவனத்தில் தங்க வைத்தனர். அன்னை அம்மலையின் அடிவாரத்தில்  பாறைகளின் இடுக்கில் இருந்த ஒரு குகையினுள் சென்று அமர்ந்து கொண்டு உலகியலை விட்டு விலகிச் சென்று  அமைதியான ஆள் அரவமற்ற சூழ்நிலையில் ஆழ்நிலை தவமியற்றி வந்தார்கள்.
குருவே துணை:-
🌸🌸🌸🌸🌸🌸🌸
   எவ்வளவு தான் அதிகமாக எண்ணை ஊற்றினாலும் தீபம் சுடர் விட்டு எரிய வேறு ஒரு நெருப்பின் உதவி தேவைப்படுகிறது அல்லவா? அந்த நெருப்பே குருவானவர் ஆவார். அந்த வகையில் அருட்பெரும் ஜோதியாக அருள் அன்னையின் ஞான ஒளி சுடர் விட்டுப் பிரகாசிக்கும்படி செய்விக்க வந்தவர் தான் வள்ளல் பெருமான்.
    "அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே!
  அன்பெனும் குடில்புகும் *அரசே!
அன்பெனும் வலைக்குட்படும் பரம்பொருளே!  அன்பெனும் கரத்தமர் அமுதே!"
  என்று அன்பே சிவமாய்த் தவம்புரிந்து சுத்த சன்மார்க்க நெறியை இறைவனிடமே பெற்று மரணமிலாப் பெருவாழ்வு எய்திய சுத்த ஞான வள்ளல் பெருமானைத் தம் வாழ்வியல் குருவென நினைந்து தவம் இயற்றத் துவங்கினார் அம்மையார்.
குரு வடிவில் அருள் வடிவு:-
🍀🍀🍀🍀🍀🍀🍀🍀
   குரு வள்ளலாரைப் போன்று அமைதியையும், சமாதானத்தையும் குறிக்கும் வகையில் தூய வெள்ளை நிற புடவையை அணிந்தும், அதனைத் தன் குருவைப் போன்றே  தலையைச் சுற்றி முக்காடு அணிந்தும்,  நெற்றி நிறைய திருநீறு பூசியும் சுகாசனத்தில்  அமர்ந்த நிலையில் சாந்த ஸ்வரூபமாய் காட்சி தருகின்றார்கள்.     ஸ்ரீலஸ்ரீ அருள் அன்னை நின்ற கோலத்திலும், அமர்ந்த கோலத்திலும் வள்ளலாரது சீடராய் விளங்குதற்குச் சாட்சியாய் அம்மையாரின் அருள் கோலங்களும் குருவையொத்தே அமைந்திருக்கிறது.
அருள் ஜோதி:-
🌺🌺🌺🌺🌺🌺
    அருள் அம்மையின் ஜீவசமாதி மேடையில் என்றென்றும் அணையா விளக்கு அருள் ஜோதியைப் பரப்பி சுடர்விட்டுப் பிரகாசித்துக் கொண்டே இருக்கிறது.
நிலவறை:-
🌼🌼🌼🌼🌼
    ஜீவ சமாதி அமைந்துள்ள கூடத்தில் ஒரு மூலையில் அருள் அன்னை தவம் இயற்றிய குகைக்குள் சென்று தரிசிக்கப் படிகள் அமைத்து சுரங்கம் போன்ற அமைப்புடன் கூடிய நிலவறை ஒன்று உள்ளது. அதனுள் சென்றால் ஸ்ரீலஸ்ரீ அன்னை அமர்ந்து தவம் இயற்றிய பாறை இடுக்கில் தவக்குழியும் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு அமர்ந்து நாமும் தவம் செய்யும் வகையில் இட வசதி செய்துள்ளனர். இந்த அதிசய நிலவறையைக் காண்கையில் அருளம்மை தவம் செய்த காட்சிகள் நம் கண்முன்னே விரிந்து   மெய் சிலிர்க்கும் வண்ணம்  அதிர்வலைகளை நம்முள் உருவாக்குகின்றது.
ஜீவகாருண்யம்:-
🌻🌻🌻🌻🌻🌻🌻
    பெண் சித்தரான தவசி அன்னை தம்மைக் காண வந்த மக்கள் பசியாறும் வண்ணம் கஞ்சி வழங்கிப் பசியால் வாடி வந்த எளியோர் மற்றும் அடியவர்களின் பசிப்பிணியைப் போக்கி வந்தார்கள்.   
    வாடிய பயிரைக் கண்டு வாடிய வள்ளலாரின் ஈகை வழியைக் கடைப்பிடித்து அங்கு வரும் அனைவருக்கும் உணவளித்து குருவழியில் தனது ஜீவகாருண்யத்தைத் தொடர்ந்து நடத்தி வந்தார். 
அருள் ஜோதி உதயம்:-
💥💥💥💥💥💥💥💥
    அன்பெனும் தவம் இயற்றிய ஸ்ரீலஸ்ரீ அருள் அன்னையின் ஜீவ காருண்ய ஜோதி அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரோடு 25.08.1971 ஆம்  நாளில் ஒன்றிணைந்தது. 
    அரை நூற்றாண்டுகள் ஆன பின்பும் அன்பு அன்னையின் ஜீவகாருண்யத் திருப்பணி ஸ்ரீஅருள் அன்னையின் ஆசிரமத்தில் தொடர்ந்து நடந்து வருகிறது. ராமலிங்க சுவாமிகளைப் பின்பற்றி வாழ்ந்த ஆத்தூர் அன்னையின் ஜீவசமாதியில் நித்தமும் கஞ்சி வழங்குதலும், பிரதி ஞாயிறு தோறும் அன்னதானமும் வழங்கி என்றென்றும் தொடர்ந்து வறியோரது பசிப்பிணி அகற்றப்பட்டு ஜீவகாருண்யம் கடைபிடிக்கப்பட்டு வள்ளலாரது அகவல் பாராயணமும் நடைபெற்று வருகிறது.
 அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடன் இணைந்த அன்பு அன்னையின் அருள் ஜோதியும் இணைந்து பிரகாசித்து வறியோரின் வாழ்வில் பசிப்பிணி அகற்றி "அன்பே தவமாய் - அருளே சிவமாய்" விளங்கும் அருள் அன்னையின் ஜீவசமாதி பீடத்தைத் தரிசித்து நாமும் நம்முள் குருவருளை நிரப்பிக் கொள்வோம்.
குருபூஜை:-
💥💥💥💥💥
25.08.1971ம் நாளன்று சித்தியடைந்த அன்புத் தவசீலி அருள் அன்னைக்கு அதே நாளில் ஆண்டுதோறும் குருபூஜை நடத்தப்பட்டு வருகின்றது.
  இந்த ஆண்டு சுபகிருது வருடம் ஆவணி மாதம் 9ம்  நாளன்று குரு வாரமும், மாத சிவ ராத்திரியும் இணைந்த வியாழக்கிழமை அன்று ஆகஸ்டு மாதம் 25ம் தேதி (25.08.2022) அன்று ஸ்ரீலஸ்ரீ அருள் அன்னையின் குருபூஜை நடைபெற உள்ளது. அது சமயம் பக்தர்கள் அனைவரும் ஸ்ரீலஸ்ரீ அருள் அன்னையின் குரு பூஜையில் கலந்து கொண்டு அன்னையின் அருள் அமுதம் பெற்று உய்ய வேண்டுகிறோம்.
அமைவிடம்:-
🍀🍀🍀🍀🍀🍀
அருளாலயம்,
முருகன் கோவில் அருகில், ஜீவாநகர்,
ஊராட்சிக் கோட்டை மலை அடிவாரம்,
பவானி, ஈரோடு மாவட்டம்.


சிங்கபாண் சுவாமிகள்

 



சிங்கபாண் சுவாமிகள் பரிபூரணமடைந்த  (ஆவணி பூரம்)நட்சத்திர நாளில் 
இன்று 28.08.2022 ஞாயிற்றுக்கிழமை
சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.👆  ▪️👉இடம்: ஶ்ரீஆண்டாள் திருக்கோயில்  சென்னை ரெட்டேரி செந்தில் நகர் அருகிலுள்ள  மாதனாங்குப்பம்,
வள்ளலார் நகர் 6-வது தெரு அருகில் ஆண்டாள் கோவில் சன்னதி தெரு.சென்னை-
99.  
தெரு ரெஷன் கடை எதிரில்)


அமலானந்த சுவாமிகள் 72-வது ஆண்டு குருபூஜை

 



அமலானந்த சுவாமிகளின் 72-வது ஆண்டு குருபூஜை விழா
இன்று 30.08.2022 செவ்வாய்க்கிழமை🌹🙏
                                                                                             ~~~~~~~~                    
🔅சுவாமிகள் திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் வட்டத்தில் இடைக்கால் என்னும் ஊரில் அவதரித்தவா். இளம் பருவத்திலே இவருக்கு  உலக விஷயங்களில் நாட்டமின்றி ஆன்மீக உணா்வில் தமது பொழுதைக் கழித்தாா். வேலூா் மாவட்டம்  ஆற்காடு சத்குரு கெங்காராம் சுவாமிகளிடம் சென்று அவரைத்தாம் குருவாக ஏற்றுக்கொண்டாா். அங்கே தம் குருவினிடத்தில் கைவல்யம், விசாரசாகரம் போன்ற பல வேதாந்த நூல்களைத் கற்று தோ்ந்து பரிபக்குவம் பெற்றாா். சுவாமிகள் நவகண்ட யோகி ஆவாா்.இவரின் இயற்பெயா் அருணாச்சலம். பல சித்துக்களை செய்தாா். சுவாமிகள் ஞானோபதேசம் செய்துவிட்டு பரிபூரணமடைந்த தினம்,06.09.1951.🌹🙏                                                               
*▪👉சமாதி அமைந்துள்ள இடம்: வேலூா் மாவட்டம், அரக்கோணத்திலிருந்து நெமிலி, ஒச்சேரி செல்லும் பாதையில், நாகவேடு என்ற ஊரில் மெயின் ரோட்டில் சமாதி உள்ளது.


மடப்புரம் மகான் குரு தட்சிணாமூர்த்தி சுவாமிகள் 187-வது குருபூஜை

 



 29.08.2022 திங்கள்கிழமை 187-வது குருபூஜை விழா காணும் மடப்புரம் மகான் குரு தட்சிணாமூர்த்தி சுவாமிகள்
🌹🍀🌹🍀🌹🍀🌹🍀🌹
ஆரூரா!தியாகேசா!!
🌻☘️🌻☘️🌻☘️🌻☘️🌻
    நால்வர் பெருமக்களுள் ஆலால சுந்தருக்கென திருவாரூர் திருவீதிகளில் ஈசனே தூது சென்ற பெருமை மிக்கதும், தான் ஈன்ற கன்று இளவரசரின் தேர்க் காலில் இடரி மாண்ட செயலுக்காக ஆராய்ச்சி மணியை அடித்து தன் கன்றுக் குட்டிக்கென நீதி வழங்கக் கோரிய பசுவின் பொருட்டு தன் மகனையே தேர்க் காலில் இட்டுக் கொன்ற மனுநீதி சோழன் ஆண்ட திருவாரூர் எனவும், கோவில் பாதி குளம் பாதி என்று பெயர் பெற்ற திருவாரூர் எனவும், தியாகேசரைத் திருத்தேரில் சுமந்து வரும் ஆடிவரும் ஆழித்தேரின் அழகு எனப் பல்வேறு பெருமைகள் கொண்ட திருவாரூர் என்றும்  சோழமண்டலத் தலை நகரங்களுள் ஒன்றான திருவாரூர் சப்த விடங்கத் தலங்களில் முதன்மையான பெருமை மிக்க திருவாரூரின்கண் ஆரூர் அரசின் அருள் மழையால் அவதரித்த மகான் ஸ்ரீ குரு தட்சிணாமூர்த்தி சுவாமிகள் ஆவார்.
  ஓடக்காரன் இன்றி தான் பாடிய தேவாரப் பதிகத்தால் ஓடத்தைச்  செலுத்தியதால் 'ஓடம் போக்கி ஆறு' என்று பெயர் பெற்ற ஆற்றின் கரையில் அமைந்துள்ள 'மடப்புரம்' என்னும் சிற்றூரில் மகான் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிகளின் அதிர்ஷ்டானம் அமைந்துள்ளது.
அருணாச்சலம்:-
🌸🍁🌸🍁🌸🍁🌸
  பொன்னி நதி  அகண்ட காவிரியாய் விரிந்து பாயும் திருச்சிராப்பள்ளியில்  சிவசிதம்பரம்  பிள்ளை - மீனாம்பாள் தம்பதியருக்கு மகப்பேறு வாய்க்கப் பெறாது திருவண்ணாமலை சென்று அங்கு தங்கி நாளும் அண்ணாமலையாரிடம் தம் குறையை எடுத்துரைத்து வந்தனர். அண்ணாமலையாரும் தம் அடியாரின் குறை நீக்க சித்தம் கொண்டவாறு மீனாம்பாள் கருவுற்று ஓர் ஆண் மகவை ஈன்றெடுத்து அக்குழந்தைக்கு 'அருணாச்சலம்' எனப் பெயரிட்டு வளர்த்து வருங்கால்...அடுத்த ஈராண்டுகளில் மற்றுமோர் ஆன்மகவை ஈன்று அக்குழந்தைக்கு 'நமச்சிவாயம்' எனப் பெயரிட்டு வளர்த்து வந்தனர்.
  மூத்த மகன் அருணாச்சலம் பிறந்தது முதற்கொண்டு பசி, தாகம் என்ற எந்த உணர்வும் இன்றியும் அழுதல், சிரித்தல் முதலான உணர்வுகளும் இன்றி மௌனக் குழந்தையாகவே வளர்ந்து வந்தார். தாயாக முன்வந்து பாலைப் புகட்டினால் மட்டுமே அருந்திவிட்டு அமைதியாகி விடுவார். காலூன்றி நடக்க முற்படும் பருவத்தில் குழந்தை தானாகவே பத்மாசனத்தில் அமர்ந்து கண்மூடி தியானம் செய்ய விளைந்தது.அது கண்டு குழந்தையின் பெற்றோர் வியப்படைந்தனர்.
அருணையின் அன்பு:-
🌼🍂🌼🍂🌼🍂🌼🍂🌼
  அருணாச்சலம் ஐந்து வயது நிரம்பிய போதும் பேசும் திறன் இல்லாமல் கண்டு மனம் வருந்தி அண்ணாமலையானைத் தொழுது அழுதனர். அடியார் படும் துன்பம் கண்டு ஒருகணமும் பொறுக்க மாட்டாத தயாளனான ஈசன் முனிவர் உருக் கொண்டு சிதம்பரம் பிள்ளையின் இல்லம் வந்தவர் கண்மூடி நிஷ்டையில் அமர்ந்திருந்த பாலகனைக் கண்டு, "இப்புதல்வன் ஊமை அல்லன். உலக மக்களை உய்விக்கும் பொருட்டு உங்களுக்குத் திருமகனாக அவதரித்துள்ளான் இப்போது பேசுக!" என்று திருவாய் மலர்ந்து அருளினார். சிதம்பரம் பிள்ளையும் "குழந்தாய் ஏதாவது பேசு" என்று கண்கலங்கி அழுதார். அக்கணமே அருணாச்சலம் "சும்மா இருக்கிறேன்" என்று முதல்முறையாகத் தன் திருவாய் மலர்ந்து அறிவித்தார்கள். அப்போது துறவியாக வந்த ஈசன் அச்சிறுவனை பார்த்து "சும்மா இருக்கின்ற நீ யார்?" என்று கேள்விக்கணை தொடுத்தார். ஞானக் குழந்தையான அருணாச்சலம் தம் தவநிலை கலையாது மூடிய விழிகளை திறவாமல், "நீயே நான்! நானே நீ!!" என்று பதிலுரைத்தான். குழந்தையின் பதில் கேட்டு மகிழ்ந்த ஈசன் "அருணாச்சலத்தின் வார்த்தை சத்தியமானது!" என்று கூறி மறைந்தார்.
  முக்காலமும் உணர்ந்த ஞானியின் வடிவமாகத் திகழ்ந்த அருணாச்சலம் ஒருநாள் தம் தந்தையை நோக்கி "உமது அன்னை தேக முக்தி அடைவார்கள்" என்று ஒரு நாள் முன்பாக அறிவித்தார்கள். அதன்படியே அவ்வையம்மையாரும் தேக முக்தி அடைந்தார்கள்.
அற்புதங்கள் அநேகம்:-
🪷☘️🪷☘️🪷☘️🪷☘️🪷
  தன் இளைய சகோதரன் நமச்சிவாயம் பள்ளிக்கு செல்வதைக் கண்ட சுவாமிகள் தன்னையும் பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்று தந்தையிடம் கேட்டு பள்ளி சென்றார்கள். அங்கும் இதர மானாக்கர்களைப் போல அல்லாமல் எந்த நேரமும் சுவடிகளின் மீது கவனம் செலுத்தியும், சில நேரம் கண்களை மூடி தியானித்தும் அமர்ந்திருந்தார்கள். ஆசிரியரும் மாணவனின் இந்நிலை கண்டு நூல் அறிவை சோதிக்க எண்ணி கேள்வி கேட்க நொடிப்பொழுதும் தாமதியாது  சுவாமிகள் கேள்விக்கான பதிலுரைத்தார்கள். ஒரு நாள் ஆசிரியரை அழைத்த சுவாமிகள் "தங்கள் ஐந்து வயது மகன் திண்ணையில் இருந்து கீழே விழுந்து கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. உடனே இல்லத்திற்கு செல்க" என்று கூறினார்கள். அதன்படியே ஆசிரியரும் பதட்டத்தோடு இல்லம் நோக்கி ஓட அவரது இல்லத்தில் இருந்து பள்ளிக்கு வந்த வேலையாள் குழந்தை அடிபட்டுள்ளதை அறிவித்தார். அன்று முதல் ஆசிரியர் சுவாமிகளின் முன் ஆசனத்தில் அமர மறுத்த செய்கை கண்டு சுவாமிகள் பள்ளி செல்வதை தவிர்த்து விட்டார்கள்.
   மற்றும் ஒரு முறை சுவாமிகள்  பள்ளிக்குச் சென்ற போது ஒரு சிறுவனை பாம்பு கடித்து விட்டு விஷம் தலைக்கேறி மாண்டான். அதுகண்ட அவனது அன்னை மிக்க துயருற்ற போது சுவாமிகள் "உங்கள் மைந்தனை நான் எழுப்பி தருகிறேன்" என்று கூறிய சுவாமிகள் அருகில் இருந்த ஒரு பிரம்பை எடுத்து அச்சிறுவனின் தலையில் லேசாகத் தட்டி "சுந்தரம் எழுந்திரு” என்றார்கள். உடனே அச்சிறுவன் தூக்கத்திலிருந்து விழித்தார் போல உயிர் பெற்று எழுந்தான். இவ்வாறாக சுவாமிகள் மகிமைகளௌ நேரடியாக உணர்ந்த அப்பகுதி மக்கள் சுவாமிகள் மீது மிகுந்த பக்தி செலுத்தலாயினர்.
ஒரே சிதை:-
🔆💥🔆💥🔆
   தந்தையோடு உண்டான சிறு மனத்தாங்கலால் சுவாமிகளின் சகோதரன் நமச்சிவாயம் யாரோடும் பேசாது எவரிடமும் சொல்லாது வீட்டை விட்டு வெளியேறினான். பெற்றோர் பல இடங்களிலும் தேடி ஓய்ந்ததும் சுவாமிகள் "காசிக்குச் சென்று விட்டவன் நீங்கள் அழைத்தாலும் அவன் திரும்பி வந்து இல்லறத்தில் புக்கான்" என்று திடமாக உரைத்தார்கள். சில நாட்கள் கழித்து சுவாமிகள் ஈன்றோரை அழைத்து தம்மை சுட்டிக்காட்டி ”தமது கருமம் இன்றிலிருந்து எட்டாம் நாளில் முடிந்து விடும். நீங்கள் சிவ நாமத்தைச் சொல்லிக் கொண்டே இருங்கள்" என்றார்கள். பெற்றோரும் சிவ நாமத்தைச் சொல்லிக் கொண்டிருந்த போது அருகில் சென்ற சுவாமிகள் அவர்கள் இருவரின் நெற்றியில் திருநீறிட்டதும் சட்டென்று இருவரும் மூர்ச்சை அடைந்து உயிர் துறந்தனர். மயானத்தில் இருவரையும் ஒரு சேர ஒரே சிதையில் இட்ட சுவாமிகள்   வெள்ளை வஸ்திரத்தை அணிந்தவாறு பல்வேறு திருத்தலங்களுக்கு யாத்திரையாகப் பயணித்தார்கள்.
  ஸ்ரீலஸ்ரீ மடப்புரம் தட்சிணாமூர்த்தி சுவாமிகளின் முக்காலமும் உணரும் ஆற்றலும்,அனுக்கிரக சக்தியும் உலகோருக்குத் தெரிய வர சுவாமிகள் பற்பல திருத்தலங்களுக்கு விஜயம் செய்து அங்குள்ள அடியார்களின் பல்வேறு இன்னல்களையும் தீர்த்து வைத்தவாறு திருவாரூர் சென்று ஓடம்போக்கி ஆற்றின் படுகையில் நித்திய வாசம் செய்து வந்தார்கள்.
ஜீவ ஆலயம்:-
🏵️🏵️🏵️🏵️🏵️🏵️
  முக்காலமும் உணர்ந்த சுவாமிகளின் அன்பர்கள் அவருக்கு ஜீவ ஆலயம் அமைக்க முற்பட்டு வந்தமை கண்டு ஓடம் போக்கியாற்றின் கரையில் சிறிது தூரம் சென்று பின் கரையை விட்டு இறங்கி ஒரு இடத்தில் கண்களை மூடி நின்றபின் தென் திசை நோக்கி வேகமாக நடந்து சென்றார்கள். சுவாமிகள் நின்ற இடமே திருக்கோயில் அமைக்க திருவுள்ளம் கொண்டார்கள் என்று முடிவு செய்து பூமி பூஜை நடத்த மண்ணைத் தோன்றிய போது அங்கு பொற்காசு கிடைக்கப் பெற்று மகிழ்வுற்றனர்.
ஜீவ ஐக்கியம்:-
💥🔥💥🔥💥🔥
   இவ்விதம் அடியவர்களின் அன்பிற்கினங்க ஜீவ ஆலயம் அமைத்துக் கொண்ட சுவாமிகள் ஒரு நாள் திருக்கோயிலின் மண்டபத்தில் அலங்கரிக்கப்பட்ட ஆசனத்தில் அடியவர்கள் புடைசூழ அமர்ந்திருந்தவர் "முடிந்தது! முடிந்தது!! முற்றிலும் முடிந்தது!!!" என்று தன் திருவாய் மலர்ந்து பின் நிஷ்டையில் ஆழ்ந்தார்கள். சுவாமிகள் விதேக முக்தி அடையும் காலம் நெருங்கியதை உணர்ந்த தொண்டர்கள் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிகள் நிஷ்டையில் அமர்ந்த எட்டாம் நாள் ஆவணி மாதம் 12ஆம் நாள் அன்று திருதியை திதியில்  உத்திர நட்சத்திரம் கூடிய சுப தினத்தில் பகல் 12 மணிக்கு சிவ ஜோதியுள் இரண்டறக் கலந்தார்கள். அப்போது அமிர்த வர்ஷினியாக சந்தன மழைத்துளிகள் சுவாமிகள் மீது விழுந்து அதன் இனிய நறுமணம் எங்கும் பரவியது. சுவாமிகளின் திருமேனிக்கு ஆகம விதிகளின்படி அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனைகள் செய்து ஆலயத்தில் ஏற்கனவே அமைக்கப்பட்ட சமாதிக் குகையினுள் சுவாமிகளின் திருமேனியை எழுந்தருளச் செய்தனர். அன்று முதல் இன்று வரை சுவாமிகள் அதிஷ்டானத்தில் பிரவேசித்த பகல் 12 மணிக்கு உச்சிக்கால பூஜையும், இரவு 8 மணிக்கு சாயரக்ஷை பூஜையும் தவறாது நடைபெற்று வருகிறது.
  "முற்பிறவிகளில்  புண்ணியங்கள் பல செய்து அதன் மூலம் சேர்த்து வைத்த நற்பலன்கள் மட்டுமே ஒருவருக்கு இந்த அதிஷ்டானத் தரிசிக்க வாய்ப்புகள் அமையும்" என்பது கூற்று.
குருபூஜை:-
🌺☘️🍁🍀🌺
திருவாரூர் மடப்புரம் ஸ்ரீலஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிகளின் 187வது குருபூஜை நாளை 29.08.2022 திங்கட்கிழமை இன்று நடைபெற உள்ளது. 
  பக்தர்கள் அனைவரும் சுவாமிகளின் குருபூஜையில் கலந்து கொண்டு குருவருளோடு திருவருளும் பெற்று உய்வடையும்படி அன்புடன் வேண்டிக் கொள்கிறோம்