Wednesday, 30 September 2020

ஸ்ரீ சாது கருணாம்பிகை தேவி

 ஸ்ரீ சாது கருணாம்பிகை  தேவி


🌹☘️🌹☘️🌹☘️🌹☘️🌹☘️

     இறைத் தத்துவத்தை உணர பக்தியில் பலவகைகள் உண்டு. சிரவணம்,கீர்த்தனம்,  ஸ்மரணம், பாத சேவனம், வந்தனம், அர்ச்சனம்,தாஸ்யம், சினேகம், ஆத்ம நிவேதனம் என்னும் சரணாகதி. பாதைகள் வேறானாலும் இலக்கு ஒன்றே. எண்ணற்ற மானுடர்களில் ஆண், பெண் பேதமின்றி இறைவனை சென்றடையும் ஆத்மா ஒன்றே.

    பெண் சித்தர்களுள் ஔவையாரும், காரைக்கால் அம்மையாரும் மனித உடலோடு கயிலையங்கிரிக்குச் சென்று இறைவனை நேரில் தரிசித்தவர்கள். இம்மண்ணுலகில் அவர்களைப் போல் மானிடப் பிறப்பெடுத்து, இறையை நாடிச் சென்று,இறை அனுபவத்தைப் பெற்று, சித்த நிலை கண்டு, ஜீவ முக்தி அடைந்த பெண் சித்தர்கள் பலருண்டு.                              அருளன்னை ஸ்ரீசாரதா தேவி, பக்த மீரா, ஸ்ரீஅன்னை, அக்கா மகாதேவி, மாயம்மா, சர்க்கரை அம்மாள், அம்மணியம்மாள் கரூர் பாட்டி சித்தர் என இன்னும் நம்மால் அறியப்படாத மாந்தருள் தெய்வங்களானோர்  பலருண்டு

மதுரையில் முத்து

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

    மீனாட்சி அம்மையின் அருளாட்சி  நடைபெறும் மதுரையம்பதியில் தியாகராஜர் பிள்ளை - ஞானாம்பாள் தம்பதியருக்கு 1930 ஆம் ஆண்டு ஆவணி மாதம் 19ஆம் தேதி அம்மைநாயக்கனூரில் ஸ்ரீகருணாம்பிகை அம்மை அவதரித்தார்

   அக்காலத்தில் பெரிதாய் பள்ளி சென்று அதிகம் படிக்காவிடினும், இளமை முதலே இறை நாட்டத்தில் ஆர்வம் கொண்டு வள்ளல் பெருமானை தன் மனத்துள் குருவென இருத்தி அருட்பெரும் ஜோதியை தியானித்து வரலானார்.

வழக்குரைத்த வனிதை:-

🍁🍁🍁🍁🍁🍁🍁

   அக்கால வழக்கப்படி அம்மையின் 14ம் வயதிலேயே பெற்றோர் அவருக்கு மணம் முடிக்க வேண்டி அம்மையை வற்புறுத்தினர். இருப்பினும், இல்வாழ்வை வெறுத்த நிலையில் இருந்த கருணாம்பிகை அம்மையாரோ  குடும்ப நண்பர் ஒருவரின் அடைக்கலத்தைப் பெற்று, அக்கால கட்டத்திலேயே பெண்ணுரிமை கோரி வழக்காடு மன்றத்தை நாடினார். வழக்கின் தீர்ப்பும் அம்மையாருக்கு சாதகமாகவே அடைக்கலம் அளித்தவரின் ஆதரவோடு தம் துறவு வாழ்வைத் தொடங்கினார்

நிலவறையில் நிஷ்டை:-

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

    திண்டுக்கல்லில் 1956ல் ஓர் ஆசிரமம் அமைத்து அங்கு ஒரு நிலவறையை ஏற்படுத்தி, அதனுள் 18 மாதங்கள் கடும் தவத்தை மேற்கொண்டு சிறந்த தவயோகி ஆனார். காருண்யம்

🏵️🏵️🏵️🏵️🏵️

  இளம்தவசியை நாடித் தம் குறைகளை போக்கிக் கொள்ள அடியவர்கள் வரத்தொடங்கினர். தம்மை நாடி வந்த அடியவர்களின் குறைகளையும்,துன்ப துயரங்களையும் அருளாளரான ஸ்ரீ கருணாம்பிகை  அம்மையார் கருணைகொண்டுபோக்கி வந்தார்

முக்தி நிலை:-

🍀🍀🍀🍀🍀🍀

    ஸ்ரீகருணாம்பிகை அம்மையார் தாம் ஜீவமுக்தி அடையும் நாளை அடியவர்களிடம் முன்னதாகவே அறிவித்துவிட்டு, அதன்படி  1970ஆம் ஆண்டு ஆவணித்திங்கள் ரேவதி நட்சத்திரத்தில் தன்னை இறைவனுக்கு ஆத்ம நிவேதனமாய் அர்ப்பணித்துத் தன் ஜீவனை இறைவனின் திருவடிகளில் சரணாகதி அடையச் செய்தார்.

ஜீவசமாதி அமைவிடம்:-

💥💥💥💥💥💥💥

    திண்டுக்கல் காமராஜர் தெருவில் சாது கருணாம்பிகை அம்மையார் ஆசிரமத்தில் அம்மையாரின் அதிஷ்டானம் அமைந்துள்ளது. ஸ்ரீ கருணானந்தீஸ்வரர் என்னும் திருநாமத்துடன் ஜீவசமாதியின் மீது சிவலிங்கம் பிரதிஷ்டை செய்துள்ளனர்.

  நாமும் ஒருமுறை அம்மையாரின் அதிஷ்டானத்தைத் தரிசித்து ஸ்ரீ கருணாம்பிகையின் காருண்யத்தைப் பெற்றிடுவோம்.

🌹☘️🌹☘️🌹☘️🌹☘️🌹☘️🌹

        கட்டுரை புனைவு :-

           அகிலா குமார்,

                  ஈரோடு.

கட்டுரை கருத்தாக்கம் :-

🌎சித்தர் தேசம்

Tuesday, 29 September 2020

ஸ்ரீலஸ்ரீ ரெண்டி சுவாமிகள்





இன்று 30.09.2020 புதன்கிழமை குருபூஜை:-

ஸ்ரீலஸ்ரீ ரெண்டி சுவாமிகள்💥

🌹☘️🌹☘️🌹☘️🌹☘️🌹☘️

    ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த நாராயணசாமி ரெட்டி என்னும் இயற்பெயர் கொண்டவரான சுவாமிகள் தேச சஞ்சாரம் செய்து இறுதியாக தமிழகத்தில் பொள்ளாச்சியை வந்தடைந்தவர் அங்கு பலபகுதிகளில் சுற்றித் திரிந்தார்.

அற்புதம்:-

🍁🍁🍁🍁🍁

    பொள்ளாச்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தின் அருகில் 30 வருடங்களாகத் தங்கி தவம் இயற்றி வந்தார். அப்போது சுற்றுப்புற சூழ்நிலைகளாலும், வெயில், மழை,காற்று போன்ற இயற்கை மாற்றங்களாலும் எவ்வித பாதிப்புமின்றி  சலனமற்று வீற்றிருந்தார். பலர் அவரை சராசரி பிச்சைக்காரன் அல்லது பைத்தியக்காரன் என்று நினைத்து வந்தனர். ஒரு சமயம் கன மழை பெய்த போது அவர் தங்கியிருந்த பள்ளி வளாகத்தில் சுமார் 30 அடி நீளத்திற்கு மேற்பட்ட சுற்று சுவர் இடிந்து விழுந்தது. ஆனால், சுவாமிகள் தங்கியிருந்த பாகம் தவிர மற்றவையெல்லாம் சிதிலமடைந்தது. இதனைக் கண்ட மக்கள் சுவாமிகள் சாதாரண மனிதர் அல்ல என்று உணர்ந்து அவரை அணுகி ஆசி பெற்றனர்.

ரண்டி,ரண்டி:-

🍀🍀🍀🍀🍀🍀

   சுவாமிகள் தம்மை நாடி வருபவர்கள் அனைவரையும் அன்போடும், வாஞ்சையோடும் ரண்டி,ரண்டி என்று தெலுங்கில் வரவேற்பார். அதனாலேயே சுவாமிகளை அவரது பக்தர்கள் 'ரெண்டி சுவாமிகள்' என்று குறிப்பிட்டு அழைத்தனர்.

தீர்த்தம்:-

🌺🌺🌺🌺

   ரெண்டி சுவாமிகள் பொள்ளாச்சியில் உள்ள மலைகள், காடுகள் போன்ற பகுதிகளில் சுற்றித் திரிந்து சில அபூர்வ மூலிகைகளைக் கண்ணாடி பாட்டில்களில் சேகரிப்பார்.அம் மூலிகைகளைக் கொண்டு மக்களின் பிணிகளைத் தீர்த்து வந்தார்.

   அதுமட்டுமின்றி ரெண்டி சுவாமிகள் தம்மை நாடி வரும்  நோயாளிகளைத் தண்ணீர் கொண்டுவரச் செய்து அதனை மந்திரித்து அவர்களிடம் தருவார். அந்தத் தண்ணீர்   நறுமணமிக்க புனித நீராக மாற்றம் பெற்றிருக்கும். அப்புனித நீரே நோயாளிகளைக் குணப்படுத்தும் அருமருந்தாக மாறி இருக்கும். இவ்விதம்  குணமடைந்தவர்கள்  ஏராளம்.

குருவும்,சீடரும்:-

🌸🌸🌸🌸🌸🌸

   சுவாமிகள்  பொள்ளாச்சி ஆனைமலையில் வேட்டைக்காரன் புதூரில் உள்ள திருவார்திரு அழுக்கு சுவாமிகளின் ஜீவ சமாதிக்கு அடிக்கடி சென்று  தியானத்தில் ஈடுபடலானார்.

        ஸ்ரீலஸ்ரீ அழுக்கு சுவாமிகளைக் குருவென மனதில் எண்ணித் தொடர்ந்து ஆழ்நிலைத் தவமியற்றி 'பரவச நிலை'யை அடைந்தார். பின்னர் பொள்ளாச்சியில் 12 ஆண்டு காலம் தவம் மேற்கொண்டு 'மஹாசமாதி நிலை'யில் ஆனைமலை சத்யேந்திர சித்தர் பீடத்திற்கு வந்தடைந்தார்.

ஜீவ முக்தி:-

🌻🌻🌻🌻🌻

   2013 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதியன்று ரெண்டி சுவாமிகள் தன் ஜீவனை பரமாத்மாவுடன் இணைத்துக் கொண்டார்.   சுவாமிகளின் பூத உடலை அவரது பக்தர்கள் ஒரு பல்லக்கில் வைத்து  சுமந்தபடி கோவை - ஒத்தகால் மண்டபத்தில் உள்ள ஸ்ரீசித்தேந்திர சித்தர் பீடத்தில் சமாதி வைக்க முடிவு செய்து எடுத்துச் சென்றனர். ஆனால் அங்கு அனுமதி மறுக்கப்படவே ஆனைமலை பெருமாள் சுவாமி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ "சத்தியேந்திர சித்தர் பீடத்தில்" சுவாமிகளின் திருமேனியை சமாதி செய்ய ஏற்பாடு செய்து நிலத்தைத் தோண்டிய போது அதிலிருந்து ஒரு அபூர்வ வெள்ளை நாகம் வெளிப்பட்டு அருகே இருந்த மரத்தடியில் படமெடுத்து நின்றது.    சுவாமிகளை சமாதி வைத்த பின்னரே அது நகர்ந்து சென்றது. சுவாமிகளே நாக வடிவில் சூட்சுமமாக வந்து சென்றதாகப் பக்தர்கள் நம்புகின்றனர். இன்றும் சுவாமிகள் அவரது பக்தர்களுக்கு நாக ரூபத்தில் காட்சி கொடுத்துக் கொண்டுதான் இருக்கின்றார். சுவாமிகள் சமாதி அடைந்த பின்னரும் கூட பல பக்தர்கள் ரெண்டி சுவாமிகளை பெருமாள் சுவாமி மலைச்சாரலில் பல முறை தரிசனம் செய்துள்ளனர்.

குருபூஜை :-

🏵️🏵️🏵️🏵️🏵️

  ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி அன்று பொள்ளாச்சி ஆனைமலையில் உள்ள பெருமாள் சாமி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீலஸ்ரீ சத்தியேந்திர சித்தர் பீடத்தில் உள்ள ஸ்ரீரெண்டி சுவாமி சித்தர் மஹா சமாதியில் குருபூஜை, 'பரிசுத்த வழிபாட்டு முறைப்படி' வெகுவிமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

   அதன்படி இன்று 30. 09. 2020 புதன்கிழமை  ஸ்ரீலஸ்ரீ ரெண்டி சுவாமிகளின் 8ம் ஆண்டு குருபூஜை காலை 10 மணி முதல் 12 மணி வரையிலும், அதன் பின்பு மகா அன்னதானமும் நடைபெறும்.


 நாமும் ஸ்ரீலஸ்ரீ ரெண்டி சுவாமிகளின் அருள் வேண்டி பிரார்த்திப்போம்

     கட்டுரை புனைவு:-

        அகிலா குமார்,

                ஈரோடு.

கட்டுரை கருத்தாக்கம்:-

🌎(சித்தர் தேசம்)