Sunday, 1 September 2013

அபிராமி பட்டர்




  
                                                                            

பொன்னிநதி என்னும் காவிரி வளம் சேர்க்கும் தஞ்சைத் தரணியில் 300 ஆண்டுகளுக்கு முன் பிறந்த அருளாளர் அபிராமி பட்டர். காலனைச் சம்ஹாரம் செய்த சிவபெருமான் அருள்புரியும் திருக்கடையூர் என்னும் திருத்தலத்தில் இவர் அவதரித்தார். இசைத்துறையிலும் பாடல் புனைவதிலும் வல்லவராக இருந்தார். அம்பிகையை வழிபடும் சாக்த நெறியில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டார். ஒளி வடிவில் அம்பிகையைத் தரிசித்து பேரின்பம் கண்டார். ஆனால், இவரின் தெய்வீகநிலையை மற்றவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. பித்தன் என்று வசைபாடினர். அவர்களின் ஏச்சையும் பேச்சையும் அபிராமி பட்டர் ஒரு பொருட்டாக எண்ணவில்லை. அக்காலத்தில் தஞ்சையை தலைநகராகக் கொண்டு சரபோஜி மன்னர் ஆட்சி செய்து வந்தார். அம்மன்னர் மகாராஷ்டிர வம்சத்தைச் சேர்ந்தவர். இறையுணர்வு, மத உணர்வில் இவருக்கு அதிக ஈடுபாடு உண்டு.  ஒரு தை அமாவாசை நாளில் சரபோஜி மன்னர் திருக்கடையூர் கோயிலுக்குத் தரிசனம் செய்ய வந்திருந்தார். கோயிலில் அபிராமி பட்டர் அம்பிகையின் முன்னர் தியானத்தில் ஆழ்ந்திருந்தார்.
மன்னரின் வருகையைக் கூட கவனிக்காமல் பட்டர் இருப்பதைக் கண்ட மன்னர் வியப்பில் ஆழ்ந்தார். ஆனால், சுற்றியிருந்தவர்கள் மன்னரிடம், மன்னா! தங்களுக்கு தர வேண்டிய மரியாதையை வழங்காமல் கண்மூடி இருக்கிறார் பட்டர். எந்நேரமும் இப்படித்தான் இருப்பார். இவர் ஒரு பித்தன், என்று பட்டரைப் பற்றி புகார் கூறினார் ஆனால், சரபோஜி மன்னர் அவர்கள் சொன்னதை நம்பவில்லை. இருந்தாலும், பட்டரின் உள்ளுணர்வை அறிய விரும்பிய மன்னர், பட்டரே! இன்று என்ன திதி? என்று கேட்டார். அப்போது கண் திறந்த பட்டர், அபிராமி அம்பிகையை ஏறிட்டுப் பார்த்தார். அவளது முகம் பிரகாசித்தது. அந்த அருள் முகத்தில் லயித்தவராக, இன்று பவுர்ணமி என்றார். ஏதோ நினைவில் அப்படி சொல்கிறார் என நினைத்த மன்னர், இதே கேள்வியை மீண்டும் கேட்டார். அப்போதும் அதே பதில் வந்தது. பின்னர், சுதாரித்து பார்த்த போது மன்னர் கேள்வி கேட்டதும், அதற்கு சரியான பதில் சொல்லாததும் தெரியவந்தது. தன் வாக்கு பொய்த்துவிட்டதே என்று கதறி  அழுதார். அரசர் வரும் வேளையில் கவனக்குறைவால் ஏற்பட்ட தவறிலிருந்து அம்பிகையே தன்னைக் காத்தருளவேண்டும் என்று அரிகண்டம் பாடினார். அபிராமி சந்நிதி முன் ஒரு ஆழமான ஒரு குழியை வெட்டினார். விறகை அடுக்கி தீமூட்டினார். அதற்கு மேல் ஒரு விட்டமும், நூறு கயிறுகளாலான உறியையும் கட்டினார். அதில் ஏறி அமர்ந்து கொண்டார். உதிக்கின்ற செங்கதிர் என்று பாடத் தொடங்கினார். 


ஒவ்வொரு பாடல் முடிந்ததும் உறியின் ஒவ்வொரு கயிறையும் அறுத்துக் கொண்டே வந்தார். பட்டர் பல பாடல்கள் பாடியும் அம்பிகையின் அருள் கிட்டவில்லை.  அம்மா! உன் விழிக்கே அருள் பார்வையுண்டு. பழிபாவம் கொண்டு உழலும்  மாந்தருடன் இனி எனக்கு என்ன தொடர்புண்டு? என்ற பொருள்படும் வகையில்,விழிக்கே அருளுண்டு அபிராமிவல்லிக்கே என்ற பாடலைப் பாடி முடித்ததும், அன்னை அபிராமி அவருக்கு அருட்காட்சி கொடுத்தாள். தன் தாடங்கம் என்னும் தோடினை எடுத்து வானவீதியில் தவழ விட்டாள். அந்த தாடங்கம் வானில் மிதந்து பலகோடி நிலாக்கள் ஒன்றுகூடினாற் போல் ஒளியைப் பொழிந்தது.  அவள் பட்டரிடம், நீ வாய் தவறி மன்னனிடம் கூறிய  சொல்லையும் மெய்யே என நிரூபித்தேன். நீ தொடங்கிய அந்தாதியை தொடர்ந்து பாடு, என்றாள்.  அம்பிகை அருள்பெற்ற அபிராமிப்பட்டர் பரவசமுற்றார். அதோடு, தம் அனுபூதிநிலையை வெளிப்படுத்தும் அந்தாதிப் பாடல்களைப் பாடி நிறைவு  செய்தார். அபிராமிப்பட்டரின் உறுதியான பக்தி கண்டு சரபோஜி மன்னரும் அகமகிழ்ந்தார். மன்னரிடம் பட்டரைப் பற்றி பித்தன் என்றும் பேயன் என்றும் கூறியவர்கள் எல்லாம் பட்டரிடம் மன்னிப்பு கேட்டனர். மன்னரும் மனம் மகிழ்ந்து பட்டருக்கு  ஏராளமானமானியம்  அளித்தார். அபிராமி அந்தாதி ஒரு அற்புதமான தெய்வீக துதிநூலாக திகழ்கிறது. இந்நூலில் யாவரும் வணங்கும் தெய்வமே! என்னைப் பெற்ற தாயே! வேதமாகவும், உபநிடதங்களாகவும் திகழ்பவளே! அருட்செல்வத்தை அள்ளித்தருபவளே! தீவினையாகிய நரகத்தில்விழாதபடி அடியவர்களைக் காப்பவளே! அருள்நிறைந்த திருவடிகளால் அடைக்கலம் தருபவளே! மனிதர்கள்,தேவர்கள், முனிவர்கள் வணங்கும் பெருமை பெற்றவளே! உயிர்களின் ஆதாரமே!வஞ்சிக்கொடி போன்றவளே! மனோன்மணித்தாயே! என்று பல விதமாகப் போற்றியுள்ளார்.  அபிராமி அந்தாதியை பவுர்ணமி, வெள்ளிக்கிழமைகளில் பாராயணம் செய்து வருபவர்களின் எண்ணங்கள் யாவும் நிறைவேறும் என்பது சக்தி உபாசகர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.

No comments:

Post a Comment